அடுத்த அதிரடி… பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்.!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கை இடைநிறுத்துமாறு சமூக ஊடக தளமான X-ஐ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அந்த கோரிக்கைக்கு இணங்க, பாகிஸ்தான் அரசு எக்ஸ் வலைத்தளம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இனிமேல், இந்தியாவில் உள்ள பயனர்களால் அதை அணுக முடியாது. இதனிடையே, கராச்சி கடலோரப் பகுதியிலிருந்து ஏவுகணை நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இன்றும், நாளையும் நடைபெறும் அந்த சோதனை நடவடிக்கைகளை இந்தியா கண்காணித்து வருகிறது.
அந்த வகையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினமே, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியருக்கு இந்திய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியரின் விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.