நாட்டின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேசிய பணமாக்கல் பைப்லைன் (என்எம்பி) யை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நித்தி அயோக் சிஇஓ அபிதாப் காந்த் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டம் ஆகும்.
இந்த திட்டம் மூலம் அடுத்த 4 வருடத்தில் மத்திய அரசின் எந்தெந்த சொத்துக்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது எனப் பட்டியலிடப்படும். இதனிடையே, தேசிய பணமாக்கல் பைப்லைன் திட்டத்திற்கு மத்திய அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அரசு சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அரசு சொத்துகளை விற்பனை செய்து நிதி திரட்டும் இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நிதி ஆதாரங்கள் நாடு முழுவதும் மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை, மொபைல் டவர்கள், ரயில் நிலையங்கள் என நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இதில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பவர் கிரிட் பைப்லைன் சொத்துக்களும் அடங்கும் என மத்திய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் துகின் காந்த பாண்டே இந்த மாத துவக்கத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node