400 கோடி செலவில் அயோத்தியில் நவீன பஸ் நிலையம் – உத்தர பிரதேச மந்திரிசபை ஒப்புதல்!

A huge Ram temple is being built in Ayodhya. The Uttar Pradesh cabinet has approved the construction of a state-of-the-art bus stand there at a cost of Rs 400 crore.

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

அங்கு 400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் அமைக்க உத்திரப்பிரதேச மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மந்திரிசபை கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சரவை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் அவர்கள், அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தொலை தூரங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே இதை மனதில் வைத்து அயோத்தியில் 400 கோடி செலவில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் கட்டும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு 400 கோடி ரூபாய் பண்பாட்டுத் துறையில் இருந்து போக்குவரத்து துறைக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் எனவும், இந்த பேருந்து நிலையத்திலிருந்து அயோத்தி மற்றும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், அயோத்தி சுல்தான்பூர் இடையில் நான்கு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த நான்கு வழி சாலைக்காக 20 கோடிக்கு மேல் செலவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.