பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

இறந்தவரின் குழந்தைகளின் கல்விச் செலவுகள் ஏற்கப்படும் எனவும் குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Devendra Fadnavis Pahalgam Attack

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்” என அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பஹல்காமில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.50 லட்சம் உதவித் தொகையும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பயணிகளின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.  காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் உதவி வழங்கப்படும். அதைப்போல, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

காஷ்மீரில் சிக்கியிருந்த மகாராஷ்டிரா பயணிகளை மீட்க, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான செலவை மாநில அரசு ஏற்கும். மும்பை மற்றும் புனே விமான நிலையங்களில் பயணிகளையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் வரவேற்க அமைச்சர்கள் ஆஷிஷ் ஷெலார், மங்கள பிரபாத் லோதா, மதுரி மிசால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல். தாக்குதலுக்கு முன் தீவிரவாதிகள் பயணிகளின் மதத்தைக் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகவும் வெறுக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்து கொள்கிறேன்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி கண்டுபிடித்து தண்டிக்கும். பிரதமர் சொல்வதை செய்கிறார்.

தாக்குதலுக்குப் பிறகு அவர் கடுமையான அறிக்கை வெளியிட்டு நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலித்தார். மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்து, 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பாகிஸ்தானியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. விசா ரத்து செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறாவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தேவேந்திர ஃபட்னாவிஸ்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்