“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!
மும்பையில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தில் ஹிந்தி பேசிய ஊழியருக்கும் மராத்தி வாடிக்கையாளருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மும்பையில் மராத்தி ஆட்சி மொழியாக இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் வசிப்பதால் அதிக அளவில் மராத்தி பேசப்படுவதில்லை. இந்தியே பிரதானமாக பேசப்படுகிறது.
இப்படி இருக்கையில், மும்பையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில், மராத்தியில் பேசிய வாடிக்கையாளரிடம் இந்தியில் பதிலளித்துள்ளார் ஊழியர். இதனையடுத்து, மராத்தியில் பேசுமாறு கூறிய அவரிடம், ‘நான் ஏன் மராத்தியில் பேச வேண்டும். எனக்கு மராத்தி தேவையில்லை’ நாங்கள் இந்தியாவில் வாழ்கிறோம், யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் பயன்படுத்தலாம்” என்று என அந்த ஊழியர் வாக்குவாதம் செய்கிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், மகாராஷ்டிராவில் பணிபுரிபவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏவும் அக்கட்சியின் மகளிர் அணி தலைவருமான சித்ரா வாக் ” ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால், அவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை தெரியவில்லை எனில், அவர்கள் அதனை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அல்லது மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி என்றும், மாநிலத்தில் வசிப்பவர்கள் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மகாராஷ்டிரா அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரை அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழியைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் தீர்மானத்தையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.