இந்தியாவிலேயே தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் பேறுகால விடுப்பு… கேரள கம்யூனிச அரசு அதிரடி உத்தரவு….அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 மாத பேறு கால விடுப்பு அளிக்க நம் அண்டை மாநில அரசான கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் உட்பட யாருக்கும் பேறுகால விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை பரிசீலித்த கேரள அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அனுமதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 6 மாத சம்பளத்துடன் விடுமுறை மற்றும் சிகிச்சைக்காக ரூ.3,500ம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் வழங்க வேண்டும். நாட்டிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக தனியார் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.