மோடியின் அரசியல் வாரிசு அமித்ஷா.. அடுத்து யோகி.. கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி.!

PM Modi - Amit Shah -Arvind Kejriwal

சென்னை : பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு அமித்ஷா என்றும் அடுத்து யோகி ஆதித்யநாத் என்றும் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்று தற்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், அடுத்த ஆண்டு, பிரதமர் மோடிக்கு 75 வயதாகி விடும். அவர் தனது அரசியல் வாரிசாக அமித்ஷாவை தான் தேர்வு செய்துள்ளார் . இதற்காக பிரதமர் மோடி கடந்த 2,3 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அமித்ஷாவுக்கு தடையாக இருந்த பாஜகவின் பெரிய தலைவர்களாக இருந்த சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், வசுந்தரா ராஜே, தேவேந்திர ஃபட்னாவிஸ் என அனைவரும் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். அமித்ஷாவுக்கு அடுத்து ஒரு தலைவர் இருக்கிறார், அவர் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், நாடு முழுவதும் இருந்து வரும் தேர்தல் கணிப்புகளின்படி பாஜக 250 இடங்களுக்கும் குறைவான இடங்களையே பெறும் என்பதைக் காட்டுகிறது. அவர்கள், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உ.பி., பீகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தங்கள் செல்வாக்கை இழந்து வருகிறார்கள். பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் கண்டிப்பாக ஆட்சி அமைக்காது.

நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அவர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவர்கள் இப்போது ஏன் 400 தொகுதிகளை வெல்வோம் என்ற கோஷத்தை எடுத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். உண்மையில், அவர்கள் 143 இடங்களுக்கு மேல் கூட வெற்றி பெற முடியாது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டனர் என அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்