இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்க பாதுகாப்புப் படையினரின் தேடுதல் குழுக்கள் விரைந்துள்ளன. குரேஸ் பகுதியில் பனி படர்ந்த பகுதியில் இந்த விமான விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக பனி பெய்து வருகிறது.
இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் துணை விமானி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விபத்து குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணி தொடங்கியது என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் (பிப்ரவரி 26) தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் காற்றின் வேகத்தில் வயலில் விழுந்து நொறுங்கியது. சம்பவத்தின் போது விமானத்தில் ஒரு விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகியோர் இருந்தனர்.