#HimachalElection2022: காங்கிரஸை சேர்ந்த 26 பேர் பாஜகவில் ஐக்கியம்!
இமாச்சல பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரேஸை சேர்ந்த 26 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் உள்பட 26 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். நவ.12ம் தேதி ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 26 பேர் பாஜகவில் இணைந்தனர்.
தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் விலகல் இமாச்சலில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக தலைவரும், இமாச்சல பிரதேச முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர் ட்விட்டரில், காங்கிரஸின் அடக்குமுறைக் கொள்கைகளால், சிம்லாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். காங்கிரசை விட்டு வெளியேறியவர்களில், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் அடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.