2023-24 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தி ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO நிர்ணயித்துள்ளது. மாதம் சம்பளம் பெறுவோரின் வருங்கால செலவிடுகளுக்காக EPFO கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.
அதற்கான ஆண்டு வட்டியாக 8.15% வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிதி நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1977 – 78ல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின், 2013 – 14 காலகட்டத்தில் 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2021 – 22ம் ஆண்டுக்கான வட்டி விகிதம், 2022 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்.? திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேட்டி.!
அப்போது, 8.75 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம், புதுடில்லியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் 2023- 24ம் நிதியாண்டில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) டெபாசிட்டுகளுக்கு 8.15 சதவீதமாக உள்ள வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யபட்டுள்ளது. இதன் மூலம் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மத்திய நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன், அரசாணையில் வெளியிடப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை வரவு வைக்கப்படும். மேலும், வருங்கால வைப்பு நிதி அமைப்பில் விருப்ப வைப்பு நிதி (VPF) செலுத்துபவர்களுக்கும், இந்த 8.25% வட்டி விகிதம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
