புதுவை மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஆழ்கடல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.!

மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு, புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

PUDUCHERRY FISHERMAN

புதுச்சேரி:தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச,17) முதல் 19ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால், புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மற்றவர்கள் புதுச்சேரி கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறித்தியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அவ்வப்பொழுது வெளியிடப்படும் அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.