அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை , விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கனௌரி மற்றும் ஷம்புவில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி இன்று 10-வது நாளாக பஞ்சாப்-ஹரியானா எல்லையில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த மோதல் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. விவசாயி ஒருவர் உயிரிழந்ததால் ‘டெல்லி சலோ’ பேரணியை 2 நாள்களுக்கு விவசாய சங்கங்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
மேலும் விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 4 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடித்துள்ளது. போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
விவசாயி உயிரிழப்பு.. இரண்டு நாட்களுக்கு பேரணி ஒத்திவைப்பு..!
இந்நிலையில், இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இன்று தெரிவித்தது. இந்தியாவில் மட்டுமே இந்தக் கணக்குகள் மற்றும் இடுகைகளைத் தடுப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், மேலும் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை குறைப்பதாக உள்ளது.
எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். இந்திய அரசின் உத்தரவை எங்களால் பகிர முடியாது, ஆனால் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவில் வெளியிடுவது சரியானது என்று நாங்கள் நம்புகிறோம் என்று எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
unknown node