தன் பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு! நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.. தலைமை நீதிபதி!

LGBT case

ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்கில் 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூடு, நீதிபதி ரவீந்திர பாட், நீதிபதி நரசிம்மா, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மாற்றப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். மொத்தமுள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தனித்தனியே தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

அதன்படி, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில், தன் பாலின திருமணம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதில்,  200 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்கள் இன்று ஏற்றுக்கொள்ள கூடியதாக மாறி இருக்கிறது. அதேபோல, முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகிறது.

சதி மற்றும் குழந்தை திருமணங்கள் ஆகியவற்றை உதாரணமாக சொல்ல முடியும்.  நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது, அதே நேரத்தில் சட்டத்தின் சரத்துக்களை கையாள முடியும்.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது. ஆனால், டாக்டரின் ஆப் செப்ரேசன் என்ற கோட்பாட்டின்படி நீதித்துறைக்கு சட்ட மறு ஆய்வு அதிகாரம் இருக்கிறது.

ஒரே பாலினத்தவர் திருமணம் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

அதாவது சட்டத்தை மறுஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது.  நீதித்துறை மறு ஆய்வு மற்றும் அதிகார பகிர்வு பிரச்சனையை கையாளக் கூடியது. அதிகாரங்களை பிரிக்கும் கோட்பாடு என்பது அரசின் மூன்று துறைகளுக்கும் தனித்தனியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு துறையில் மற்றொரு துறை செயல்பாட்டை மேற்கொள்ள முடியாது. தன் பாலின  உறவு என்பது நகர்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையதல்ல. நகரங்களில் வசிக்கும் அனைவருமே மேட்டுக்குடியினர் என கூறிவிட முடியாது.

இது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கான மட்டும் என கட்டுப்படுத்தப்படவில்லை. திருமண சீர்திருத்தங்கள் என்பது சட்டதிருத்தங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது. திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டமன்றத்தையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது.

சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது நிலையானது, மாறாதது என சொல்வது தவறான விஷயம். அரசியல் சாசன பிரிவு 21ன் கீழ் சுதந்திரமாக வாழும் உரிமை, வாழ்கை துணையை தேர்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது.  எனவே, இந்த விவகாரத்தில் எனவே, நீதிமன்றங்கள் சட்டம் இயற்ற முடியாது, நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியும். இதனால், சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது, தேசத்தை சுந்தந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு சென்றுவிடும். ஒரு சட்டம் செல்லுமா என்பதை ஆராயும் அதிகாரத்தை நீதிமன்றத்திடம் இருந்து எடுக்க முடியாது. குடும்ப விவகாரங்களில் தலையிடும் அரசின் அதிகாரத்தை நீக்கினால் பலவீனமான நபர்கள் பாதுகாப்பை இழந்து  விடுவார்கள். எனவே, இரு நபர்களுக்கு இடையிலான உறவுகளை, அரசின் ஆய்வு அதிகார வரம்பில் இருந்து விலக்க முடியாது எனவும் தன் பாலின திருமணம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகள் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாலின மற்றும் சிகிச்சை மேற்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. அதுபோன்று, தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு அரசு பாரபட்சம் காட்டக்கூடாது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாசிக்கும்படி கட்டாயப்படுத்த கூடாது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் புகார்கள் தெரிவிக்க தனி தொலைபேசி எண்களை உருவாக்க வேண்டும். தன்பாலின ஜோடிகள் உட்பட திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க உரிமை உண்டு.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ்வதற்கான உரிமைகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க கூடாது. மற்ற குடிமக்களைப் போலவே இந்த தன் பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது. அதன் பொருள் அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

இந்த ஜோடிகள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்ப வசதிகளை செய்து தர வேண்டும். இத்தகைய குழந்தைகள் கட்டாய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எந்த ஒரு நபரும் ஹார்மோன் சிகிச்சைகளுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

சிறப்புத் திருமணச் சட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்று நீதிபதி ரவீந்திர பட் கூறியுள்ளார். ஒரே பாலினத்தவர்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது திருமண சமத்துவத்திற்கான ஒரு படியாகும் என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். வழக்கமான திருமண முறை மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்க வேண்டும் என்றுள்ளார். இவரும் தன் பாலின திருமணத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையை எடுத்துள்ளார். இதுபோன்று, தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்