110 நாட்கள்... 200 விமானங்கள்... டெல்லியில் சிக்கிய பலே திருடன்.!

சென்னை : 110 நாட்களில் சுமார் 200 விமானங்களில் பயணம் செய்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட வந்த நபரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.

Delhi Police Arrested a Theft

சென்னை :110 நாட்களில் சுமார் 200 விமானங்களில் பயணம் செய்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட வந்த நபரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு உள்ளூர் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தன்னிடம் இருந்த 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை தொலைத்து இருந்தார். அதே போல கடந்த பிப்ரவரி மாதம் அமிர்தரஸில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ஒருவர் 20 லட்சம் மதிப்புள்ள நகைகளை இழந்தார். இவ்வாறாக பல்வேறு விமான நிலையங்களில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு சம்பவங்கள் கடந்த 3 மாதத்தில் அதிகமாக பதிவாகின.

இதனை அடுத்து , டெல்லி மற்றும் அமிர்தார்ஸில் உள்ள விமான நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், ஒரு நபரின் வருகை மட்டும் அடிக்கடி தென்படுவதை கண்டறிந்தனர். அதன் பின்னர் அந்த நபரை பிடிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதன் பின்னர், அந்த நபர் விமான நிலையங்களில் டிக்கெட் புக் செய்வதற்கு பயன்படுத்திய மொபைல் நம்பரை ஆய்வு செய்த போது, அது போலி என்றும், பல்வேறு சமயங்களில் இறந்து போன தனது சகோதரன் பெயரில் விமான டிக்கெட் எடுத்ததும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

சுமார் 3 மாதங்களாக (110 நாட்கள்) 200 விமானங்களில் கைவரிசை கட்டிய ராஜேஷ் கபூர் எனும் 40 வயது மதிக்கத்தக்க நபரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து நேற்று டெல்லி காவல்துறை துணை ஆணையர் (ஐஜிஐ) உஷா ரங்னானி செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் ராஜேஷ் கபூர் கைது செய்யப்பட்டார் என கூறினார்.

மேலும், திருடிய பொருட்களை விற்க உதவியாக இருந்த ஷரத் ஜெயின் எனும் 46வயது மதிக்கத்தக்க நபரும் கரோல் பாக்கில் கைது செய்யப்பட்டார் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார். கைதான ராஜேஷ் கபூர் மீது இதுவரை 11 வழக்குகள் உள்ளது என்றும், அதில் 5 வழக்குகள் விமான நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் என்றும் கூறப்படுகிறது.

விமானத்தில் பயணிக்கும் வயதான வசதியான நபர்களை குறிவைக்கும் ராஜேஷ் கபூர், அவர்களை பின்தொடர்ந்து, அவர்கள் செல்லும் அதே பிசினஸ் கிளாஸ் எனும் உயர்வகுப்பு விமான டிக்கெட் எடுத்துக்கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தில் அருகில் தன் இருக்கை வருமாறு செய்துகொண்டு அவர்களை திசை திருப்பி விலையுயர்ந்த பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளான் என டெல்லி காவல்துறை துணை ஆணையர் (ஐஜிஐ) உஷா ரங்னானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

110 நாட்கள்... 200 விமானங்கள்... டெல்லியில் சிக்கிய பலே திருடன்.!