கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு புதிய ஏற்பாடு…
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு திகைத்து நிற்கும் இந்த சூழலில் அனைவரும் தாங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளில் வேலையின்றி சிக்கித் தவித்து இந்திய தொழிலாளர்களை மீட்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்புபவர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி வரும் 7-ம் தேதி மீட்டு வருவதற்கான பயணம் தொடங்குகிறது. இதற்காக, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் பட்டியலை வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள் தயாரித்துள்ளன. இந்த பயணத்தில் கட்டண அடிப்படையில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. வர்த்தக விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்றும், விமானத்தில் ஏறுவதற்கு முன் ஒவ்வொருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர் என்றும், விமானத்தில் மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் மூலம் அவரவர் இருப்பிடத்தை அடைந்தவுடன், ஒவ்வொருவரும் ‘ஆரோக்ய சேது’ என்ற மத்திய அரசின் செயலியில் தாங்களை பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்றும், இந்தியா வந்தவுடன் அங்கும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பின்னர், இவர்கள் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவ முகாமிலோ அவர்கள் கட்டண அடிப்படையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 14 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பான விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகமும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் விரைவில் தங்கள் இணைய தளத்தில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.