கொரோனா பாதிப்பால் கல்வித்துறை மிக மோசமான நிலையை சந்திக்கும்! எச்சரிக்கை விடுக்கும் உலக வங்கி!

கொரோனா பாதிப்பால் கல்வித்துறை மிக மோசமான நிலையை சந்திக்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தனர். மேலும், படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நம் வாழ்நாளிலேயே கல்வித் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை பார்த்துவிட்டோம்.
மேலும், இந்த சுகாதார நெருக்கடி நிலை நடவடிக்கைகள், உலகளாவிய மந்தநிலையை உண்டாக்கும்போது, இந்த பாதிப்பு இன்னும் மோசமாகும். இந்த பிரச்சினையை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, பள்ளிகளை மூடி, குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாத்து விட்டோம். அடுத்தகட்டமாக, பள்ளிகளை திறக்க திட்டம் வகுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், விரைவான கற்றல் திறனுக்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். நீண்டகால பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், அதை சமாளிக்க தீவிர தன்மையுடைய கொள்கை நடவடிக்கை எடுப்பது அவசியம் என உலக வங்கி அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.