வெளிய வருவியா!? போடு தோப்புக்கரணம்! – தடை மீறிய வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்த குஜராத் காவல்!
உலகம் முழுவதும் தனது கோரதாண்டவத்தில் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர தாண்டவத்தை காட்ட துவங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் இந்த வைரஸிற்கு 400க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 10 பேர் பலியாகி உள்ளனர்.
இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் பாதிப்பு மற்றும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வூரடங்கு உத்தரவினையும் வைரஸின் வீரியத்தையும் அறியாமல் மக்கள் சாலைகளில் இன்னும் நடமாடி கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நடமாடினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய,மாநில அரசுகள் கூப்பாடு போட்டாலும்
அதனை எல்லாம் காதில் வாங்காமல் ஊரங்கு உத்தரவை மீறி வாகனத்தில் சுற்றியவர்களை நிறுத்திய காவல்துறையினர் அவர்களை தோப்புக்கரணம் போடவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் ஆனது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்துள்ளது. அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வலம் வந்த நபர்களை பிடித்த காவல் துறையினர் உத்தரவினை மீறயதற்காக தோப்புக்கரணம் போட வைத்து வினோதமான தண்டனையினை வழங்கி உள்ளனர்.