சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணை…!10 நாட்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!
ஊழல் கண்காணிப்பு ஆணையம் 10 நாட்களுக்குள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிகார மோதலால் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவும் சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா ஆகியோரை விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு.
இதைத்தொடர்ந்து கட்டாய விடுப்பை எதிர்த்து சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணண் கோரிக்கை வைத்தார்.
பின்னர் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சய் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய்,ஊழல் கண்காணிப்பு ஆணையம் 10 நாட்களுக்குள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனால் இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் 10 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பது கடினம் என்று தெரிவித்தார்.இதற்கு பதில் கூறிய தலைமை நீதிபதி சரி, 240 மணி நேரம் தருகிறோம், முடித்துவிடுங்கள் என்று தெரிவித்தார்.அதேபோல் விசாரணை நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்த தகவல்களை சீலிடப்பட்ட கவரில் சிபிஐ ஒப்படைக்க வேண்டும்.மேலும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்னாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கை நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய்.