டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Arvind Kejriwal

சென்னை:டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. பின்னர் அந்த மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. அதில் அரசுக்கு சுமார் 2,800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பாட்டு விசாரணை தீவிரமடைந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையினர் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில், முதன்முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயரும், ஆம் ஆத்மி கட்சி பெயரும் இடம்பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.