ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் 55 சதவீதம் வாக்குப்பதிவு..!
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கிறது.
ஜெயநகர் தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதில் 55 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பதிவாகும் வாக்குகள் 13–ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.