எல்லைத் தாண்டி சென்று தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதல்!
இந்திய ராணுவத்தினர் எல்லைத் தாண்டி சென்று பாகிஸ்தான் ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீவிரவாதிகளை குறி வைத்து நடத்திய துல்லியத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தினர் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 28 ம்தேதி நள்ளிரவு 12.30 மணி தொடங்கி 29ம் தேதி அதிகாலை 4 மணி வரை துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டனர். எல்லைக் கோட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பிட்ட இலக்கில் வந்து இறங்கி, தீவிரவாதிகள் மீது துல்லியத்தாக்குதலைத் தொடுத்தனர்.
40 தீவிரவாதிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏழு தீவிரவாத கூடாரங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு மழை பொழிய அதில் இருந்து உயிர்த்தப்பி இந்திய வீரர்கள் பத்திரமாக தங்கள் எல்லையை அடைந்தனர். அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் இத்தாக்குதலை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாக பார்த்தனர்.
துல்லியத் தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அரசுக்கு வலியுறுத்தின. தாக்குதல் நடக்கவே இல்லை என்றும் பாஜக அரசு நாடகமாடுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இச்சம்பவம் நடைபெற்றது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வீடியோ காட்சி ஒன்று 636 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை தாக்குதலில் பங்கேற்ற ராணுவ உயரதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் தங்கள் ஹெல்மட்டுகளில் வைத்திருந்த சிறிய கேமராக்களில் இந்த தாக்குதல் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.
இப்படியொரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று பாகிஸ்தான் அரசும் மறுப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.