உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏமாற்றமடைந்த பாஜக …!மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில் தலையிட முடியாது…!
உச்ச நீதிமன்றம் மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது. இது தொடர்பான பாஜகவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மேற்குவங்கத்தில் வரும் மே 1, 3, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 9 (நேற்று) கடைசி தேதி ஆகும். இந்நிலையில் மேற்குவங்க பாஜக பிரிவு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், “மேற்குவங்க தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் உதவி பதிவு அதிகாரிகள் பாஜக வேட்பாளர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க மறுக்கின்றனர். பாஜகவினரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தடுக்கின்றனர். அங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.
எனவே, வேட்பு மனுக்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடவும் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதியை நீட்டிக்கவும் உத்தரவிட வேண்டும். துணை ராணுவத்தை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், “மேற்குவங்க மாநிலத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தேதியை நீட்டிக்க உத்தரவிட முடியாது. மேலும் உள்ளாட்சித்தேர்தல் நடைமுறையில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேநேரம், அனைத்து வேட்பாளர்களும் மாநில தேர்தல் ஆணையத்தை உடனடியாக அணுகி முறையிடலாம்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.