திமுகவினர் எதிர்ப்பு.? அதிமுக எம்.எல்.ஏ ‘திடீர்’ சாலை மறியல்.!
வேப்பனஹள்ளிதொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி , அரசு திட்டங்களை தொடங்கி வைக்க எதிர்ப்பு எழுந்ததால், அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி முனுசாமி, இன்று தனது தொகுதிக்குட்பட்ட சூளகிரி வட்டம் காமன்தொட்டி பகுதியில் மக்கள் நல திட்டத்தை தொடங்கி வைக்க சென்றிருந்தார். அங்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தார்.
அப்போது, அங்கிருந்த திமுகவினர் கே.பி.முனுசாமி திட்டத்தை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அங்குள்ள அதிமுகவினர், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதனால், சுமார் 1 மணி நேரமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தரப்பில் ஏற்கனவே பூஜை போட்டுவிட்டதாகவும், இது எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரம், திட்டத்திற்கான நிதி யாருடையதாக இருந்தாலும், நான் இந்த தொகுதி மக்கள் பிரதிநிதி. அதனால், தன்னை பூமி பூஜை போடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என கூறி கே.பி.முனுசாமி கூறி வருகிறார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காவல்துறையினர் இருதரப்பினர் மத்தியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.