ஆளுநர், அமித்ஷா அப்பா சொத்தை நாங்கள் கேட்கவில்லை.. தமிழிசைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி.!

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய முதலில் தமிழக அரசு சார்பில் 5000 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு சார்பில் 450 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய குழு தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த குழுவிடம் தமிழக அரசு சார்பில் தற்காலிக உடனடி நிவாரணமாக சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்திற்காக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயையும் கேட்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு முதலில் கேட்ட நிவாரண தொகைகள குறைவான அளவு நிவாரண தொகை அளித்த மத்திய அரசு மீது திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது தொடர்பாக நேற்று முன் தினம் கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் எங்கள் (தமிழகம்) வரிப்பணத்தை தானே கேட்கிறோம். அவங்க அப்பா வீட்டு பணத்தையா கேட்கிறோம்.? என கடுமையாக விமர்சித்து இருந்தார்

எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் – ஒடிசா குழு இன்று சென்னை வருகை

இதற்கு பதில் கூறும் வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், அவங்க தாத்தா பதவியில் அப்பா இருந்தார். அந்த பதவியில் இருக்கும் அவர் அப்படி தான் பேசுவார். கலைஞர் பேரன் இவ்வாறு மரியாதை குறைவாக பேச  கூடாது. கலைஞர் அழகாக தமிழில் பேச கூடியவர். உதயநிதியின் இந்த மாதிரியான பேச்சு அவரை எதிர்மறையான தலைவராக மாற்றிவிடும். இதே போல திமுக தொண்டன் கூட அவரை பார்த்து கேட்டுவிடுவான் என தமிழிசை கூறியிருந்தார்.

இன்று சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கி இருந்த பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி பேசுகையில், எண்ணெய் கழிவுகள் விரைவில் அகற்றப்படும். மீனவர்கள் சிறப்பு நிவாரணம் கேட்டுள்ளனர். தலைமை செயலகத்தில் உள்ள குழு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார். அப்போது தமிழிசை கருத்துக்கு பதில் கூறிய உதயநிதி, நான் எங்கு மரியாதை குறைவாக பேசினேன்.? நான் மரியாதையாக பேசட்டுமா, நாங்கள் ஒன்றும் ஆளுநரின் அப்பா வீட்டு சொத்தையோ, அமித்ஷாவின் அப்பா வீட்டு சொத்தையோ கேட்கவில்லை எங்கள் வரிப்பணத்தை தான் கேட்கிறோம் என மீண்டும் நிவாரண தொகை விவகாரம் குறித்து பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.