பச்சிளம் குழந்தைகளுக்கு தலையில் மஞ்சள் நிற செதில் வர காரணங்களும்.. தீர்வுகளும்..

cradle cap (1)

சென்னை– உங்கள் குழந்தையின் தலையில் மஞ்சள் நிற செதில்கள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அப்படி வர காரணம் என்ன மற்றும் அதற்கான தீர்வு முறைகளை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடூப்  சேனலில் பகிர்ந்துள்ளார்.

பச்சிளம் குழந்தைகள் பிறந்து இரண்டு வாரங்களில் அவர்களின் தலையில் மஞ்சள் நிற செதிள்கள் போன்ற படலம் தென்படும். இதற்கு இன்பென்ட்சியல்  செபோர்ஹெக்   டெர்மடிடிஸ் என மருத்துவர்கள் கூறுவார்கள் .மேலும் [cradle cap] தொட்டில் தொப்பி என்றும்  கூறுவார்கள். இது பெரியவர்களுக்கு வரும் பொடுகு போன்ற பிரச்சனை தான். இதை எளிதில் சிகிச்சையின் மூலம் சரி செய்து விட முடியும்.

தொட்டில் தொப்பி வர காரணம் ;

இந்த தொட்டில் தொப்பி வர இரண்டு வகை காரணங்கள் உள்ளது. ஒன்று தாயின் ஹார்மோன் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு வரும் .இது குழந்தை பிறந்த பிறகு சில குழந்தைகளுக்கு பக்க விளைவை ஏற்படுத்தும் .அதாவது குழந்தையின் தலையில் சுரக்கும் எண்ணெய்  சுரப்பிகள் சராசரியை விட அதிகமாக உற்பத்தி ஆகும். இந்த நிலையில் குழந்தையின்  இறந்த செல்கள் அந்த எண்ணெய் படலத்தில் ஒட்டிக் கொள்ளும். இதனால்தான் செதில் போன்ற அமைப்பாக காணப்படுகிறது.

மற்றொரு காரணமாக கூறப்படுவது மலசீசியா என்று சொல்லக்கூடிய ஒருவகை ஈஸ்ட் தொற்றின் மூலமும் இவ்வாறு இருக்கும் .சுருக்கமாக கூற வேண்டும் என்றால் குழந்தையின் தலைப்பகுதியில் சுரக்கக்கூடிய அதிக படியான  எண்ணெயில் இறந்த செல்கள் ஒட்டிக்கொண்டு படலமாக இருப்பதாகும் .

தொட்டில் தொப்பி வந்தால் சரி செய்வது எப்படி?

பொதுவாக குளிக்க வைத்தால் இது சரியாகிவிடும். ஒருவேளை போகவில்லை என்றால் இரவில் லேசாக தேங்காய் எண்ணெய் வைத்து மெதுவாக மசாஜ்  செய்து விடவும். பிறகு அடுத்த நாள்  இரண்டு நிமிடம் மெதுவாக மசாஜ்  செய்து குளிக்க வைக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு சளி பிடித்து விடும் என்ற பயம் இருந்தால் குளிப்பதற்கு அரை மணி நேரங்களுக்கு முன்பே தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ்  செய்து பிறகு குளிக்க வைக்கலாம்.

மேலும் தேங்காய் எண்ணெய் ஆனது அலர்ஜி மற்றும் பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாகும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் உதிர்ந்து சுத்தமாகிவிடும். இந்த செதில்களை  கட்டாயம் கைகளால் பிடுங்கவோ சொரிந்தோ தேய்க்க கூடாது.. மிகத் தடிமனாக இருந்தால் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். ஏனெனில் செதில்கள் உதிர்ந்தால் குழந்தையின் தோல்களில்  படும். இது சில சமயங்களில் ராஸஸ்  வர வாய்ப்புள்ளது .

தொட்டில் தொப்பி வராமல் தடுப்பது எப்படி?

சில பெற்றோர்கள் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தலை குளிக்க வைக்க மாட்டார்கள் சளி பிடித்துக் கொள்ளும் என்ற பயத்தில் அவ்வாறு செய்வார்கள். ஆனால் குழந்தை பிறந்து சில நாட்களிலேயே தலைக்கு குளிக்க வைத்து விட வேண்டும்.[அதாவது பிறந்த குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன் குழந்தைகள் இரண்டரை கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். தொப்புள்கொடி விழுந்திருக்க வேண்டும்.]

ஷாம்பு இல்லாமல் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு குளிக்க வைத்தாலே இந்த செதில் படலம் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் மருத்துவரின் பரிந்துரைப்படி குழந்தைகளுக்கென  தயாரிக்கப்பட்ட ஷாம்புகளையும் பயன்படுத்தலாம். குளித்தபின் சிறிது ஈரம் இருக்கும்போது டூத் பிரஸ் போன்ற சாப்டான பிரஷ்களை வைத்து மெதுவாக எடுத்து விடவும். கண்டிப்பான முறையில் கைகளால் பிடுங்க கூடாது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்