கேரளா குண்டுவெடிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு!

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

குண்டுவெடிப்பு 

கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. 2,000 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த குண்டுவெடிப்பின் சம்பவத்தில் 1 பெண் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு 

கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று குண்டுவெடிப்பின் சம்பவம் நடைபெற்ற போது பினராயி விஜயன் டெல்லியில் இருந்தார்.

எனவே, குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் பினராயி விஜயனுக்கு தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக டெல்லியில் இருந்து தற்போது கேரளாவுக்கு பினராயி விஜயன் வந்துகொண்டு இருக்கிறார். இன்று இரவு அல்லது மாலைக்குள் கேரளாவிற்கு வந்தவுடன் குண்டு வெடிப்பை பற்றி விரிவான விவரங்களை கேட்டறிந்து அதன்பிறகு நாளை காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” 

இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும்  கேரள போலீசார் தெரிவித்துள்ளார்.

ஒருவர் சரண்

மேலும், எர்ணாகுளம் கலமசேரி குண்டு வெடிப்பு தொடர்பாக, கொடக்காரா போலீஸ் ஸ்டேஷனில் கொச்சியை சேர்ந்த ஒருவர் சரண் அடைந்துள்ளதாகவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.