கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 2.6 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர்.
கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மே 13ம் தேதி அதாவது இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் 136 தொகுதிகளில் 131 இடங்களில் வெற்றி பெற்று 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
மேலும், ஆளும் பாஜக 61 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 2.6 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் மேற்கண்ட எந்த கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் நோட்டாவைத் தேர்வு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இரவு 7:15 மணி புள்ளிவிவரங்களின்படி, இன்று வாக்களித்த 3.84 கோடி வாக்காளர்களில் 2,69,322 (0.7%) பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.