‘எதிர்கால தலைமுறையினருக்கான கலங்கரை’! முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவானது, இன்று பசும்பொன்னார் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தனது மரியாதையை இன்று காலை செலுத்தினார்.

அதைப்போலவே அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் வந்து மரியாதை செலுத்தினார். மற்றும்  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் உருவச் சிலைக்கு, மாலை அணிவித்து தனது மரியாதை செலுத்தி இருந்தார்.

இந்த நிலையில், அவர்களை தொடர்ந்து பிரதமர் மோடியும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவருக்கு அஞ்சலியை செலுத்தியுள்ளார். அத்துடன் தமிழில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ‘காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கம்’ என்று முத்துராமலிங்க தேவரை புகழ்ந்து தமிழில் பதிவிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக மோடி அதில் கூறியதாவது ” மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.