பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்தியாவின் மூன்று வீரமிக்க தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள்...!!

Bhagat Singh, Rajguru, Sukhdev , India, three heroic martyrs, hanged , History Today, Today in history, today history,

மார்ச் 23, 1931 பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்தியாவின் மூன்று வீரமிக்க தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள். தூக்கு தண்டனை மார்ச் 24 தான் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது . எனினும் மக்களின் கடும் எதிர்ப்புக்களை, எழுச்சி மிக்க ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கும் நோக்கோடு மார்ச் 23ம் நாள் மாலையே தூக்கு தண்டனையை நிறைவேற்றிட சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். சிறைக் காவலர்கள் பகத்சிங்கை அழைத்துச்செல்ல நெருங்கினார்கள் அப்போது அவன் மெய்மறந்து ஒரு நூலை வாசித்துக் கொண்டிருந்தான். அது – “லெனினின் அரசும், புரட்சியும்” அதனை படித்து முடிக்கும்வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு தனது வாசிப்பைத் தொடர்ந்தான். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்களது இறுதி ஆசை – தூக்கிலிடப்படுவதற்கு பதிலாக துப்பாக்கியால் சுடப்படவேண்டும் எனத் தெரிவிக்கிறார்கள் – ஆனால் ஆங்கிலேய அதிகரிகள் அதனை ஏற்கவில்லை. தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது. தூக்கிலிடபட்ட பகத்சிங், சுகதேவ்க்கு வயது 23, ராஜகுருவுக்கு 24, தோழர்கள் வாழ்ந்த காலம் கொஞ்சம்தான், ஆனால் பல துறைகளில் கவனம் செலுத்தியதோடு அறிவுஜீவியாகவும் வாழ்ந்தார்கள். வாழ்வின் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்ட இவர்களின் கனவு இந்திய விடுதலைக்குப் பின்னராவது நிறைவேறியதா? பல கோடி மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், கல்வி பெற முடியாமலும், சுகாதாரம், குடிநீர் கிடைக்கும் வழியறியாது அல்லல்படுகின்றனர். சாதி மோதல்களும், வகுப்பு வாதங்களும் தலைவிரித்தாடுகின்றன. பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்த மூன்று தியாகிகளின் தூக்குக்கும் தியாகத்துக்கும் இன்னமும் இந்த நாடு பதில் சொல்லவில்லை.