எனது மகளை அடித்து கொலை செய்துவிட்டான் .! சித்ராவின் கணவர் மீது தாயார் குற்றச்சாட்டு.!

எனது மகளை அவரது கணவர் ஹேமந்த் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி சித்ராவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார் .

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் கணவர், பெற்றோர்கள் மற்றும் சக நடிகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த நிலையில் சித்ராவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, எனது மகளை அவளது கணவர் அடித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டியதுடன் எனது மகளை கொன்றதற்காக அவளது கணவன் மீது புகார் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார் . அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும், பதிவு திருமணம் நடந்தது உண்மைதான் எனவும் , ஹேமந்தை நம்பி தான் எனது மகளை ஒப்படைத்ததாகவும் ,அவளை அவரே அடித்து சாகடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.அதனுடன் சித்ராவிற்கு ஹேமந்துடன் பிப்ரவரி 10-ம் தேதி ஊரறிய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தற்போது சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது .அவரது இறுதி சடங்குகள் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.