மும்பை: விநாயகர் சதுர்த்திக்காக விற்பனைக்கு வந்துள்ள சிலைகள் இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது காரணம் ஜிஎஸ்டிதான் என்று சிலை தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் வரும் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட பிள்ளையார் சிலைகளை வைத்து வணங்கி பூஜை செய்து அவற்றை நீர் நிலைகளில் கரைப்பார்கள்.
வட மாநிலங்களில் மட்டுமல்லாது தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சிலையின் விலை சற்று உயர்ந்துள்ளது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
விலை உயர்வுக்கான காரணம் பற்றி தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
விநாயகர் சிலையை உருவாக்க பயன்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மீது கடந்த ஆண்டு 13.5 சதவிகித வரி இருந்தது. தற்போது ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு 18% உயர்த்தப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைக்கு வண்ணம் பூச தேவைப்படும் பெயின்ட் மற்றும் வார்னிஷ் மீது கடந்த ஆண்டு 13.5% வரி இருந்தது. தற்போது அது 28% ஆக அதிகரித்துள்ளது.
சிலையை அலங்கரிக்க தேவைப்படும் கிரீடம் உள்ளிட்ட அலங்கார பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விநாயகர் சிலை விலையும் இந்த ஆண்டு சற்று அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.