கங்கை ஆற்றில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தையை வளர்ப்பதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்ததை படகு ஓட்டிகள் பார்த்துள்ளனர். அந்த மரப்பெட்டியில் பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மரப்பெட்டியில், அந்த பெண் குழந்தையுடன் பல தெய்வங்களின் புகைப்படம் இருந்தது. மேலும், குழந்தை பிறந்த விவரங்களுடன் ஒரு காகிதமும் அதில் இருந்தது. பின்னர், அந்த குழந்தையை படகு ஓட்டிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் குழந்தை நிலையைப் பார்த்து ஐ.சி.யுவில் அனுமதித்தனர்.
இந்த குழந்தையை வளர்ப்பதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் காசிப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பின்னர், அம்மாவட்ட மாஜிஸ்திரேட் மங்லா பிரசாத் சிங் அதிகாரிகளுடன் மருத்துவமனை சென்று பெண் குழந்தையின் நிலை குறித்து விசாரித்து, பெண் குழந்தையை அரசு பராமரிக்கும் என்று கூறினார்.
குழந்தையை அரசாங்க செலவில் வளர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தையை வளர்ப்பதில் அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைக்க முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.