சென்னையில் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும்- ஏ.கே.விஸ்வநாதன்!

திருமணம், மருத்துவ சேவை தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் அதனை புதுப்பிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி (நாளை) முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

எனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. இதனால் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில்  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இந்தமுறை ஊரடங்கு மிக கடுமையாக கடைபிடிக்கப்படும் என கூறிய அவர், திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது எனவும், ஏற்கனவே இ-பாஸ் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்த நிலையில், போலி இ-பாஸ் மூலம் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.