விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி திறக்கப்பட்டது. நாள்தோறும் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு வழிபாடுகளான படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்து வருகின்றன. விஷூ பண்டிகையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கைநீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷூ தினத்தில் கைநீட்டம் பெற்றால் குடும்பத்தில் செல்வம் நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலையில் படிபூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தனர். விஷூ பண்டிகையை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில், பழஞ்சிறை தேவி கோவில், சிறையின்கீழ் சார்க்கரை தேவி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்