புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களுடைய திறமைக்குப் பரிசு, பாராட்டுகள் கிட்டும். விலையுயர்ந்த தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மனைவி உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு உங்களுடைய ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைவதால் குடும்பத்திலும் சலசலப்புகள் வரும். உங்களுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த சிலர் முயல்வார்கள். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள்.
சிறு சிறு விபத்துகள் நிகழும். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே நிழல் கிரகங்களான ராகு 4-ம் இடத்திலும், கேது 10-லும் தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டி வரும். பழைய கடனை நினைத்துக் கவலைப்படுவீர்கள். உத்தியோகத்திலும் வேலைச்சுமை அதிகமாகும். செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.
சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து போகும். 10.3.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலகட்டங்களில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 03.5.2018 முதல் 30.10.2018 வரை கேதுவுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் மறைமுக அவமானங்களும் வந்துபோகும். ஆனால், பதவி உயரும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். 02.08.2018 முதல் 29.8.2018 வரை சுக்ரன் 6-வது வீட்டிலே சென்று மறைவதனால் தங்க ஆபரணங்கள் தொலையலாம். கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை மாற்றத் திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கிக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் தங்கள் பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். சனி சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். என்றாலும் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும் சம்பள உயர்வும் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும்.
இந்தப் புத்தாண்டு சமயோஜிதப் புத்தியால் சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவுசுளிவுகளையும் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்துக்கு அருகிலுள்ள இலஞ்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுமாரர்சுவாமியை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டில் சுபிட்சம் உண்டாகும்.
source: dinasuvadu.com