தோஷங்களை போக்கி..! சந்தோஷத்தை வர வைக்கும் பிரதோஷம்…!! வழிபடுவது எவ்வாறு..?? வரங்களை வரவைப்பது எப்படி..??

Default Image

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.பிற தோஷங்களை நீக்கும்  வலிமை பிரதோஷத்திற்கு உண்டு சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில்அதாவது மாலை 4.00-7.30 மணி வரை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

பிரதோஷம் பிறந்த கதை…!

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் தசமி திதி துவங்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம் கக்கிய கொடிய விஷத்தினால் தோன்றிய வெப்பத்தினால் அனைவரும் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவித்தனர் அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்கவே, சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார். சிவபெருமான் காப்பாற்றிய நிகழ்வு ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின் மீண்டும் அனைவரும் பாற்கடலை கடையத் துவங்கி மறுநாள் அதாவது பன்னிரண்டாம் நாளான துவாதசியன்று அமிர்தம் கிடைத்தது. பின்னர் நடைபெற்ற பிற காட்சிகளினால் தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்த தேவர்கள் சிவபெருமானையே மறந்து விட்டார்கள்.

மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும். அன்று அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவிற்கு வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டனர். சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப் பின் நந்தி தேவரின் கொம்புகளின் மத்தியில் நின்றபடி அழகிய நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடிய அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுவது.

அன்று முதல் ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசியில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவபெருமான் நடனம் ஆடிய தினம் சனிக்கிழமையில் வந்திருந்த திரியோதசி தினம் என்பதினால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை சனி பிரதோஷம் என கருதி சிறப்பாக வழிபடுவார்கள்.

பிரதோஷ வழிபாட்டுப் பலன்கள் …!

அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்களை நெய்வித்தியமாகப் படைத்தும் மற்றும் மலர்களைக் கொண்டு பூசிப்பதும், சந்தனக் காப்புப் அல்லது சந்தன அபிஷேகம் போன்றவை செய்வது வழக்கமானதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட திரவ்வியங்களினால் அபிஷேகம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்களில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்துக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.

திங்கள் கிழமை
மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
செவ்வாய் கிழமை
உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பார்கள்.
புதன் கிழமை
புத்திர பாக்கியம் கிடைக்கும். இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும்.
வியாழன் கிழமை
வித்தைகள் கை கூடும்  சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைத்து கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
வெள்ளிக் கிழமை
பகை விலகும். குடும்ப பாசம் கூடும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இந்த தினத்தில் சக்கரையினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜிப்பதின் மூலம் அனைத்து எதிர்ப்புக்களும் குறையும்.
சனிக் கிழமை
சனிப்பிரதோஷம் என்பது தனிப் பிரதோஷம் ஆகும். அன்று சிவபெருமானை வணங்குவதினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்தால் முக்தி அடையும் வழி கிடைக்கும்.
ஞாயிற்றுக் கிழமை
வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

பிரதோஷத்தன்று சிவன் சன்னதியில் செய்யவேண்டிய முறை …!

எந்த சுவாமி சன்னதியையும் மூன்று முறை  வலம் வந்து துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம். அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது. இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்றும் கூறுவது உண்டு.

அனைத்து சன்னதிகளிலும் சுவாமி மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளியில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதை கோமுகம் என்பார்கள். பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மையைக் கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப்பாகும். பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை வலம் வரும் காலத்தில் இந்த கோமுகத் தொட்டி முக்கியப் பங்கை வகிக்கின்றது.

பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரதட்சிண முறை என்ன…?

ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கியப் பின், சிவனை நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம் வர வேண்டும். ஆனால் எப்போதும் செய்வது போல அந்த பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது.

வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.

இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும்.

இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்க வேண்டும். இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.

பிரதோஷத்தின் வகைகள்…!

நித்திய பிரதோஷம் – தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் – சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் – கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் – சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் – உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
மலர்கள்        – தெய்வ தரிசனம் கிடைக்கும்
பழங்கள்        – விளைச்சல் பெருகும்
சந்தனம்        – சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை       – எதிர்ப்புகள் மறையும்
தேன்             – இனிய சாரீரம் கிடைக்கும்
பஞ்சாமிர்தம்  – செல்வம் பெருகும்
எண்ணெய்     – சுகவாழ்வு கிடைக்கும்
இளநீர்            – நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
பால்               – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர்              – பல வளமும் உண்டாகும்
நெய்              – முக்தி பேறு கிடைக்கும்

 

விரதம் கடைப்பிடிக்கும் முறை…!

இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
மேலும் தகவலுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்