தனுசு ராசி நேயர்களே ! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

Default Image

தனுசு ராசி நேயர்களே !

சதாசர்வ காலமும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக்கூடிய மனசுடையவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக தொடர்வதால் வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக்கொண்டிருக்காதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் முடியாத செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையால் தடைபட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. மழலை பாக்கியம் கிடைக்கும். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்றும் மறைவதால் பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த பத்திரம், ஆவணம் இல்லாமல் யாருக்கும் பணம் தர வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். தாய்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். வருடப் பிறப்பு முதல் 13.01.2018 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கைத் தவிர்க்கப் பாருங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்றுத் தாமதமாகும்.

03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். 22.04.2018 முதல் 15.5.2018 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் நீங்கள் நியாயமாகவும் யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாகப் பேசுவதாகக் குறை கூறுவார்கள். இந்தப் புத்தாண்டு முழுக்கவே ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் இடத்திலும் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

பல் வலி, காது வலி, கண் எரிச்சல் வந்து போகும். பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். வழக்கில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என அவ்வப்போது கண்காணிப்பது நல்லது.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். முடிந்தவரை கடன் தருவதைத் தவிர்க்கப் பாருங்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளைத் திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகாலாக இருந்த உங்களைத் திடப்படுத்தி, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வைப்பதாகவும், பணப் புழக்கத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காரமடை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீசந்தான வேணுகோபால கிருஷ்ணரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். தந்தையை இழந்தோருக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டில் எல்லாவற்றிலும் ஏற்றம் உண்டாகும்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்