“ரொம்ப முயற்சி செய்தான்.. ஆனால் இறைவன் பறிச்சிட்டான்” வருத்தத்தோடு கூறிய எம்.எஸ்.பாஸ்கர்.!
மனோஜ் ரொம்ப நல்ல தம்பி, எப்போமே என்னை பாராட்டிட்டே இருப்பான் என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா, உடலுக்கு பிரபலங்கள் உட்பட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அரசியல் தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிகவின் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடிகர் சூர்யா, நடிகர் பிரபு, த.வெ.க தலைவர் விஜய், உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து நடிகர்எம்.எஸ்.பாஸ்கரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர் ” மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அவருக்கு மட்டுமல்ல, முழு தமிழ் சினிமா உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பை பிரதிபலிக்கிறது.
மனோஜின் இளம் வயதில் ஏற்பட்ட மறைவு குறித்து எம்.எஸ்.பாஸ்கர் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்ததோடு, 48 வயது என்பது ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டிய பருவம் என்பதால், இந்த இழப்பு அவருக்கு மிகவும் பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது.
எந்தப்படம் பார்த்தாலும் மனோஜ், எப்போதும் தன்னை பாராட்டுவதாகவும், தன்னுடைய நடிப்பையும், பணியையும் மதித்து பேசுவதாகவும் கூறிய அவர், முன்னேறணும் முன்னேறணும் அப்படினு பெரிய முயற்சியில் இருந்தாரு, ஆனால் இறைவன் பறிச்சிட்டான். ரொம்ப வேதனையா இருக்கு” என்று எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமாக குறிப்பிடுகிறார்.