சென்னை :பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 04, 2025) சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களிலும் செய்தி சேனல்களிலும் பல தகவல்கள் பரவி வருகின்றன.இது பற்றி அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்…
நடந்தது என்னவென்றால், பிக் பாஸ் தர்ஷன் நேற்று (ஏப்ரல் 03, 2025) மாலை ஜிம்மில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததால், அவர் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, அவர் அருகிலுள்ள கடைகளில் விசாரித்தார். அப்போது, அருகில் உள்ள “டீ பாய்” என்ற டீக்கடைக்கு வந்த ஒரு குடும்பத்தினர் அந்த கார் தங்களுடையது என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தர்ஷனும் அவரது தம்பியும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பு ஏற்பட்டது.இதில், தாக்கப்பட்டவர் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதி என்பவரும், அவரது தாயார் மகேஸ்வரி என்பவரும் தெரியவந்துள்ளது. ஆதிசூடி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர்கள் தங்களைத் தாக்கியதாகவும், ஆபாசமாகத் திட்டியதாகவும், கர்ப்பமாக இருக்கும் ஆதியின் மனைவியை அடித்ததாகவும் குற்றம்சாட்டி, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த விவகாரம் இன்னுமே பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது பேசிய தர்சன் ” “நான் வழக்கம்போல ஜிம்மில் இருந்து வந்தேன். என் வீட்டு வாசலில் கார் நின்றதால், உள்ளே போக முடியவில்லை. யாருடைய கார் என்று விசாரித்தபோது, டீக்கடையில் இருந்தவர்கள் தங்களுடையது என்று சொன்னார்கள். அதன்பிறகு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சம்பவம் நடந்தது. என்னுடைய தம்பியை தாக்கும் போது நான் எப்படி சும்மா இருக்க முடியும். நடிகர்னா பெரிய இவன்னு கேட்கிறாங்க. எவ்வளவு பிரச்சனைகள் தான் வரும்” எனவும் கண்ணீர் மல்க பேசினார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டிருக்கும் நீதிபதி மகன் ” காரை எடுங்கள் என்று என்னிடம் சொல்லியிருந்தால் நாங்களே எடுத்திருப்போம் . ஆனால், அப்படி சொல்லாமல் ரொம்பவே கேவலமாக அவர்கள் எங்களை பேசினார்கள். ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்கள் எனக்கு திருமணம் முடிந்து 6 மாதம் தான் ஆகிறது. என்னுடைய மனைவி கையை அவர்கள் பிடித்து முறுக்கிய காரணத்தால் தான் எனக்கு கோபமே வந்தது” எனவும் பேசியிருக்கிறார். இப்போது இது தொடர்பான விசர்நாய் நடைபெற்று வருவதால் இனிமேல் தான் தெளிவான விவரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
