மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் பிரபலமானவர். ஆனால் சமீபத்தில் அவர் தொடர்பான ஒரு பரபரப்பான செய்தி அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு லூதியானா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பல முறை கோர்ட் நோட்டீஸ் அனுப்பியும் சோனு சூட் ஆஜராகததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. லூதியானாவின் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்திற்கு வாரண்டை அனுப்பியுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் சோனு சூட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், வாரண்டை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக சோனு சூட்டிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.