அப்போ துபாய்., இப்போ இத்தாலி..! அஜித்தின் கார் ரேஸ் பதக்க வேட்டை…
துபாய் ரேஸை அடுத்து இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் கார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்துள்ளது.

சென்னை : நடிகர் அஜித் குமார் தனது சினிமா வாழ்வை தாண்டி தனக்கு பிடித்தமான துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அண்மைக்காலமாக தனது கார் ரேஸிங்கில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2024 செப்டம்பரில் அஜித் குமார் ரேஸிங் குழுவை ஆரம்பித்த இவர், ஜனவரி 2025-ல் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல இப்போதும் இத்தாலியில் சாதனை படைத்துள்ளது அஜித்குமார் கார் ரேஸிங் குழு.
நேற்று (மார்ச் 22) இத்தாலியில் உள்ள முகெல்லோ சர்க்யூட்டில் (Mugello Circuit) நடைபெற்ற 12 மணி நேர முகெல்லோ (Michelin 12H Mugello) கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் குழு பங்கேற்று 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் 24H சீரிஸ் என்ற சர்வதேச பந்தயத் தொடரின் முதல் பந்தயமாகும். இதில் இறுதியில் சாம்பியன்ஷிப் பட்டம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த போட்டியானது இத்தாலியில் டஸ்கனி பகுதியில் முகெல்லோ சர்க்யூட் கார் பந்தய தளத்தில் நடைபெற்றது. மார்ச் 21 (சனிக்கிழமை) மற்றும் மார்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) வரை 24 மணிநேரம் நடைபெற்றது. அஜித் குமார் ரேஸிங் குழு Porsche 911 GT3 Cup கார்களை ரேஸிங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரேஸில் மொத்தம் 65-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. இதில் இறுதியாக 3வது இடத்தைப் பெற்றது அஜித்குமார் கார் ரேஸிங் குழு. முகெல்லோ சர்க்யூட் டானது மொத்தம் 5.245 கி.மீ நீளமும், 15 திருப்பங்களையும் கொண்ட தளமாகும். அஜித் குமாரின் ரேஸிங் குழு துபாயை தொடர்ந்து தொடர்ச்சியாக இத்தாலி ரேஸிலும் பங்கேற்று 3ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றதை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.