எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!
எனக்கு உத்வேகம் கொடுத்து இந்த மாதிரி ஒரு படத்தை இயக்க சொன்னது அஜித் சார் தான் என இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக காட்சிகள் இருக்கும். ஆனால், இப்போது வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் அவருடைய வழக்கமான திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை நடிக்காத சில காட்சிகளிலும் அஜித் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
படம் வெளியானதை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விடாமுயற்சி படம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். பேட்டியில் பேசிய அவர் ” விடாமுயற்சிக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலில் இந்த மாதிரி அவருடைய வழக்கமான படங்களை விட வித்தியாசமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தை இயக்கும்போது பயமாக இருந்தது. இயக்கும்போதே நான் அவரிடம் சொல்லிக்கொண்டே இயக்கினேன். அவர் தான் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்து நிச்சியமாக இந்த படத்திற்கு அங்கிகாரம் கிடைக்கும். நீங்கள் நினைத்தபடி இயக்குங்கள் என எனக்கு உத்வேகம் கொடுத்தார்.
படத்தில் நீ ஹீரோவா என அஜித்தை பார்த்து ஒருவர் கேட்பார் அதற்கு நான் ஹீரோ இல்லை என அஜித் கூறுவார் அந்த வசனங்கள் அவர் தான் படத்தில் வைக்கலாம் என என்னிடம் வலிறுத்தினார். அந்த ஒரு காட்சி மட்டுமில்லை படத்தில் அதைப்போல பல விஷயங்களை செய்தார். ரொம்பவே பயமாக தான் படத்தை இயக்கினேன். ஆனால் பலமுறை எனக்கு ஊக்கம் கொடுத்தது அவர் தான். எல்லாத்துக்கும் காரணமே அவர் மட்டும் தான்.
பொதுவாகவே அஜித் சார் படங்களுக்கு பெண்கள் ரசிகைகள் வருவதில்லை என்பது உண்மை தான். ஆனால், அது இந்த படத்திலிருந்து மாறுகிறது என நான் நினைக்கிறேன். பெண் ரசிகைகள் பலருக்கும் படம் பிடித்திருக்கிறது என கூறி வருகிறார்கள். இதையும் அஜித் சார் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தெரிவித்தார். அவர் சொன்னது போல இப்போது நடந்துகொண்டு இருக்கிறது” எனவும் இயக்குநர் மகிழ் திருமேனி பேசியுள்ளார்.