அஜித்தை நடிகர் என ஒரு வரியில் அடக்கிட விட முடியாது.. அரசு அதிகாரி நெகிழ்ச்சி பதிவு.!

Ajith Kumar - Payani Dharan

அஜித் குமார் : நடிகர் அஜித் குமார் தன்னுடைய நேர்மை, எளிமை, மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றிற்காகப் புகழ்பெற்றவர். அவர், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தனது நற்செயல்கள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையாலும் ஒரு முன்னோடியானவர்.

குறிப்பாக, தனியுரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் வெளியிட விரும்புவதில்லை,  அஜித் தனது பணி மற்றும் படங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார். பொது விழாக்களில் பங்கேற்பது குறைவாகவே இருக்கும், இப்படி இருக்கையில் தனது விடாமுயற்சி படப்பிடிப்பின் போது, ஒரு அரசு அதிகாரியை சந்தித்துள்ளார்.

ஆம், நடிகர் அஜித் உடனான சந்திப்பு குறித்து இந்திய அயலுறவு பணி அதிகாரி பயணி தரண் என்பவர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “நடிகர் அஜித், அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.

ஒரு கைவிரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் அஜித்தின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘அஜித் என்பவர் ஒரு நடிகர்’ என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கிவிடமுடியாது என்பது எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்துகொள்ள, உணவும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்.

எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின்போது அஜித் உட்பட எல்லோரும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தபோது, வைதேகியும் நானும் எங்கள் உரையாடல்களுக்கு டிக்கட் போடலாம் என்று அடிக்கடி எழும் எண்ணம் மீண்டும் வந்தது.

ஆர்வத்துக்காக ஒரு புது விஷயத்தைச் செய்துபார்ப்பதன் மகிழ்ச்சி, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் மனநிலை மாறுவது, பைக், கார், சைக்கிள் பயணங்கள் என்று உடலும் மனமும் இணைந்து செயல்படும் தருணங்களின் அனுபவம் என்று இயல்பான போக்கில் போனது பேச்சு.

அஜித் விடைபெற்றுச் சென்றபிறகு பல சிந்தனைகள். மனிதர்கள் ஏன் பல விஷயங்களைச் செய்கிறார்கள்? அவர்களது ஊக்கம் எதைப் பற்றியது? இவற்றிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? என் பதில்: ஆர்வத்தால் செய்யும் காரியங்களுக்குத் திடமான பலன்கள் எதுவும் தேவையில்லை.

ஒரு விஷயத்தை முயன்றுபார்த்து அனுபவித்திருக்கிறோம் என்பது போதாதா? கடைசியில் அதையும் மீறி எந்த விஷயத்தில் என்ன கிடைத்துவிடுகிறது? அவ்வளவு தான் வாழ்க்கை: அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்