நீயே ஒளி : தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
தமிழ் மொழிக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஈடுபட்டுள்ளார் என்று அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் கொண்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ்மீது தீர்ப்பற்று கொண்டவர். அதனை பல்வேறு மேடைகளில் நாம் கண்டிருப்போம்.
முதன் முதலாக இரண்டு ஆஸ்கர்களை வென்ற போது ஆஸ்கர் விழா மேடையிலேயே எல்லா புகழும் இறைவனுக்கே எனக் கூறுவதாகட்டும், ஹிந்தி சினிமா மேடையில் ஹிந்தி நடிகருக்கு விருது வழங்கும் போது சிறந்த நடிகர் எனக் கூறியதாகட்டும், செம்மொழியான தமிழ்மொழியே என உலக தமிழ் மாநாட்டிற்கு இசையமைத்தது என இவரது தமிழ் ஆர்வம் பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். அதோடு ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் நினைவு சின்னம் ஒன்றின் மாதிரி வடிவமைப்பு உள்ளது. நீயே ஒளி என நுழைவு வாயில் மேல்பக்கம் எழுதபட்டுள்ளது. அதனை சுற்றி தமிழ் வாசகங்கள் உள்ளது.
இதனை குறிப்பிட்டு , ஏ.ஆர்.ரகுமான் தமிழுக்கு நினைவுச்சின்னம் எழுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டு விளக்கப்படங்களாகவும், இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் தமிழ் பெருமைகளை அவர் வழங்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் எப்போது ஆரம்பமாகும் என குறிப்பிடப்படவில்லை.