பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பதவி ராஜினாமா..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பதவி விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பிளேயர் ஏஜென்ட் தல்ஹா ரெஹ்மானியுடன் தொடர்புடைய நிறுவனமான “யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்” நிறுவனத்தில் இன்சமாம் பங்கு வைத்து இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உலகக்கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி நடந்து இருப்பதாக இன்சமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாமிற்கு எதிராக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் ஜகா அஷ்ரப்புக்கு அனுப்பியுள்ளார். ஹாரூன் ரஷித் பதவியில் இருந்து விலகிய பிறகு 53 வயதான இன்சமாம்-உல்-ஹக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிசிபியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே  இந்தப் பதவியில் இருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

இன்சமாம் உல் ஹக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒரு குழுவை அமைத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  தனது எக்ஸ் ட்விட்டரில்  “ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, அணித் தேர்வு செயல்முறை தொடர்பான ஊடகங்களில் வெளியான நலன் முரண்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ளது. இந்த குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கும்” என தெரிவித்துள்ளது.

ஆதாரம் இல்லாமல் மக்கள் பேசுகிறார்கள். என் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதனால் நான் ராஜினாமா செய்வது நல்லது என்று முடிவு செய்தேன். பிசிபி என்னை விசாரிக்க விரும்பினால், நான் இருக்கிறேன். மக்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் என்னைப் பற்றி பேசுகிறார்கள். ஏதேனும் ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள். எனக்கும் பிளேயர் ஏஜென்ட் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை இதுபோன்ற குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்துகின்றன என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.

இன்சமாம் 2016-19ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராகவும் பதவி வகித்துள்ளார். அவர் தலைமை தேர்வாளராக இருந்தபோதுதான், 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வென்றது.  பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில் இன்சமாம் உல் ஹக் ஒருவர். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன். இன்சமாம் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தானுக்காக மொத்தம் 375 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11701 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டியில்,  10 சதங்களையும் 83 அரை சதங்களையும் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையும் சிறப்பாக உள்ளது. அவர் 120 டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள் மற்றும் 46 அரை சதங்கள் உட்பட 8830 ரன்கள் எடுத்துள்ளார். 1992 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியிலும் இன்சமாம் இடம் பெற்றிருந்தார்.  தனது ஓய்வுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அரையிறுதி செல்லும் வாய்ப்பை ஏறக்குறைய தவறிவிட்டுள்ளது. இந்த உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக செயல்ப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டும். நடப்பு  உலகக்கோப்பையில் பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியுள்ளது  உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

 

author avatar
murugan