ஓய்ந்தது பிரச்சாரம்…சூறாவளியாக சுழன்ற தலைவர்கள்.! சூப்பர் ஹைலைட்ஸ்…

LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமும் நிறைவடைந்தது.

பிரச்சாரம் முடிவடைந்ததும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதனால், பிரச்சார நேரம் நிறைவடைந்ததும் தொகுதி சாராத ஆட்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் வெளிநபர்கள் தங்கவில்லை என்பதை விடுதி நிர்வாகிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கு முன்னதாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, சென்னையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல்பறக்க இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டனர்.

கொளுத்தும் வெயிலில் அனல்பறக்க பிரச்சாரம் மேற்கொண்ட தலைவர்களின் ஹைலைஸ்ட்ஸ்  குறித்து பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டு அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். இரவில் தனியாக பேய்ப்படம் பார்த்தவர்கள் கூட, இரவில் மோடி டிவியில் பேசப்போகிறார் என்றால் பயப்படுகின்றனர் என்று கூறி வாக்குகளை சேகரித்தார்.

எடப்பாடி பழனிசாமி

சேலத்தில், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை வாகனப் பேரணி நடத்தி தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, திமுக மற்றும் பாஜக பற்றி தனது விமர்சனங்களையும் தங்கள் கட்சி வாக்குறுதிகளை முன் வைத்து மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

அண்ணாமலை

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இன்று இறுதி கட்ட தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “நான் அல்லது நீ இருக்க வேண்டும், இதைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அரசியல் களத்தினுள் நுழைந்து விடக்கூடாது என்பதில், இரு திராவிட கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன” என்றார்.

உதயநிதி ஸ்டாலின்

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக திமுகவின் திட்டங்களை எடுத்துக்கூறி சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பற்றியும், இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்றும் வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.