ஒரு சாதரண கருவியால் சலவை எந்திரத்தின் எடையை குறைப்பதால், எரிசக்தி செலவையும், கரியமில வாயு வெளியேற்ற அளவையும் குறைப்பதோடு, முதுகு காயங்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சலவை எந்திரம் சுழன்று இயங்கும்போது, அதனை அசையாமல் இருக்கச் செய்ய 25 கிலோ எடையுடைய கான்கிரீட் பலகை (slap) வழக்கமாக விலை குறைந்த சலவை எந்திரங்களில் பொருத்தப்படுகின்றன.
இந்த கான்கிரீட்டுக்கு பதிலாக சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலனில் தண்ணீர் நிரப்பி வைப்பதுதான் தற்போதைய புதிய கண்டுபிடிப்பு ஆகும்.
சலவை எந்திரத்தை ஓரிடத்தில் வைத்த பின்னர், அது அசையாமல் இருப்பதற்கு இந்த கொள்கலனில் நீர் நிறைத்து வைக்கப்படும்.
சலவை எந்திரத்தில் உருவாக்கப்படும் இந்த மாற்றம் அதனை எடை குறைந்ததாக, செலவு குறைந்ததாக, போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்றும் என்று இதனை உருவாக்கிய நோட்டிங்ஹாம் டிரெண்ட் பல்கலைக்கழக ஆய்வு அணியினர் தெரிவித்துள்ளனர்.
கான்கிரீட்டுக்கு பதிலாக காலியான கொள்கலனை வைப்பதால், சலவை எந்திரத்தின் எடை மூன்றில் ஒரு பங்கு குறையும்.
இந்த மாற்றம் சலவை எந்திரத்தின் தரமாக மாற்றப்பட்டுவிட்டால், அவற்றை ஏற்றிச்செல்லும் லாரிகளில் எடை குறைகிறது. அதன் விளைவாக, லாரிகளில் இருந்து வெளியேறும் கரியமில வாயு அளவும் குறைகிறது.
அவற்றின் இந்த புதிய கருவியை பொருத்துவதன் மூலம், ஓராண்டில் சுமார் 44 ஆயிரத்து 625 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்கலாம்.
“இதற்கு முன்பே செயல்படுத்தியிருக்க வேண்டும்”
பொது பயன்பாட்டு பொருட்களில் புத்தாக்க தீர்வுகளை கண்டுபிடிப்பதற்காக இந்த பல்கலைக்கழகத்தோடு இணைந்து பணிபுரியும் டோச்சி டெக் லிமிடெட் என்கிற பொருட்கள் வடிவமைப்பு நிறுவனம்தான் இந்த புதிய கருவியை உருவாக்கியுள்ளது.
இதனை இளங்கலை படிக்கின்ற 22 வயதான டைலான் நைட் பரிசோதனை செய்து பார்த்துள்ளார்.
“இந்த கருத்தை இதற்கு முன்னரே செயல்படுத்திருக்க வேண்டும் என எல்லோரும் எண்ணுகிறார்கள். யாராலும் இதனை நம்ப முடியவில்லை. ஆனால், இது உண்மையிலேயே நன்றாக வேலை செய்கிறது என்பதை நான் உறுதியாக கூற முடியும் என்கிறார் டைலான் நைட்.
விலை குறைந்த சராசரியான சலவை எந்திரத்தின் முன்பக்கத்தில் துணிகள் துவைக்கப்படும் டிரம்முக்கு அடியில் ஒன்றும், மேலே இன்னொன்று என இரண்டு கான்கீரிட் பலகைகள் (slap) உள்ளன. .
இந்த புதிய கருவியை சோதனை செய்ய டிரம்முக்கு மேலே இருக்கின்ற காங்கிரீட் கல்லில் மட்டும் இந்த தண்ணீர் கொள்கலனை வைத்து டைலான் நைட் சோதனை நடத்தியுள்ளார்.
காங்கிரீட் தண்ணீரை விட அடர்த்தி மிக்கது என்பதால், எடை வேறுபாட்டை சரி செய்து கொள்ள, கான்கிரீட் கற்களை விட பெரியதாக இந்த கொள்கலன்கள் இருக்க வேண்டியதாகிறது.
அனைவருக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு தாயகத்திலேயே எழுந்துள்ள தனித்துவமான மறுசிந்தனையில், தீமைகள் இல்லை என்பதை உறுதி செய்ய விரும்புகின்ற இந்த நிறுவனம், பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களோடு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இதனை ஏன் இதற்கு முன்னால், யாரும் எண்ணி பார்க்கவில்லை என்றும் கேட்கலாம் என்று கருதப்படுகிறது.