உத்தரப்பிரதேசத்தில், பெண்களின் பாதுகாப்புக்காக பிங்க் நிறப் பேருந்து இயக்கப்பட உள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில், ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் நிர்பயா என்ற மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா நிதி மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு முதல்கட்டமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 2,195 கோடி ரூபாய் நிர்பயா நிதிக்கு ஒதுக்கப்பட்டதாக மத்திய பா.ஜ.க அரசு தெரிவித்தது. ஆனால், அந்த நிதியிலிருந்து பெண்களுக்கு எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பிங்க் நிறப் பேருந்து இயக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு நிர்பயா நிதியிலிருந்து 84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா, ஏ.சி என்று அதிநவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேலும் ஆண்களுக்கு இப்பேருந்தில் அனுமதி கிடையாது..