தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில், இங்கிலாந்து அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகள் முடிவில், இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என முன்னிலை இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 362, தென் ஆப்ரிக்கா 226 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 224/8 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. பிராட் (5), ஆண்டர்சன் (2) அவுட்டாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
கடின இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 380 ரன்கள் எடுத்தால் வெற்றி என, களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியை எல்கர் (5), பவுமா (12), குயின்டன் டி காக் (1), கைவிட்டனர். ஆம்லா (83), கேப்டன் டுபிளசி (61) அரைசதம் அடித்த போதும், இங்கிலாந்து வெற்றியை தடுக்க முடியவில்லை. ரபடா (1), மார்கல், ஆலிவர் ‘டக்’ அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மொயீன் அலி 5, ஆண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று, கோப்பை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக மொயீன் அலியும் (இங்கிலாந்து), தொடர் நாயகனாக மார்னே மார்கலும் (தெ.ஆப்) தேர்வு செய்யப்பட்டனர்.