சென்னை: போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய் கைது செய்யப்பட்டார். தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாநாயகனாக நடித்துவருபவர் ஜெய் (32). இவர் தனது 16வது வயதில் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருக்கு ெசன்னை-28 படம் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, சென்னை -28 பாகம் இரண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு சொகுசு காரில் சென்னையில் வலம் வந்து விபத்துகள் ஏற்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வரிசையில் இளம் நடிகர் ஜெய் இணைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பிரேம் ஜி உட்பட பல நடிகர்களுடன் புதிதாக திரைக்கு வர உள்ள “பார்ட்டி” படத்தின் இரவு விருந்து முடித்து விட்டு நடிகர் ஜெய் தனது சொகுசு காரில் நண்பரும் நடிகருமான பிரேம்ஜி உடன் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி அதிவேகமாக காரை ஓட்டி சென்றார். அடையார் திரு.வி.க. பாலத்தின் வழியாக பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக சொகுசு கார் பறந்துள்ளது. அடையார் மேம்பாலத்தின் மேல் செல்லும்போது எல்.பி. சாலைக்கு திரும்பும் வளைவில் வேகத்தின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கர சத்தத்துடன் மோதி நின்றது. நள்ளிரவு என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கார் மோதிய வேகத்தில் நடிகர் ஜெய் மற்றும் பிரேம்ஜி காரில் மயங்கிய நிலையில் இருந்தனர். இதுகுறித்து அந்த வழியாக ெசன்ற வாகன ஓட்டிகள் கார் ஒன்று மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்படி அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரின் உள்ளே இருந்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது நடிகர் ஜெய் தள்ளாடியபடி காரில் இருந்து கீழே இறங்கினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், நடிகர் ஜெய் மது அருந்தி உள்ளாரா என சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக நடிகர் ஜெய் மது போதையில் இருந்தது தெரியவந்தது. சொகுசு கார் என்பதால் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், நடிகர் ஜெய் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது(185), அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது(279) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும், அவரது லைசென்ஸ்சை ரத்து செய்தனர்.